சவேந்திரசில்வா யாழ்ப்பாண பஸ்ஸில்?


இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


வடக்கில் இராணுவத்தினரால் இடையூறு இல்லை என்றும் சுமூகமான நிலையே உள்ளதாகவும் அரசியல்வாதிகளே பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் அண்மையில் இராணுவத் தளபதி கருத்து வெளியிட்டிருந்தார்.

'இராணுவத் தளபதியாக இருக்கின்ற சவேந்திர சில்வா இராணுவத்தினரால் வடக்கில் இடையூறு இல்லை என்று கூறுகின்றார். மாங்குளத்தில் இருந்து வவுனியா வரையிலும் 5 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. எனவே சவேந்திர சில்வா பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில் பயணம் செய்து வரவேண்டும். அதுவும் இராணுவ உடை இல்லாமல் மக்களோடு மக்களாக அவர் வர வேண்டும். அப்போதுதான் இராணுவத்தால் மக்கள் எவ்வளவு வஞ்சிக்கப்படுகின்றனர் என்று அவருக்குத் தெரியும்.

தேர்தலுக்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனினும் எனது வாகனத்தினை விசுவமடு ரெட்பானாவில் மறித்து வைத்திருந்தனர். இதற்குக் காரணம், இராணுவ அதிகாரி ஒருவர் பொதுஜனபெரமுனவின் வேட்பாளராக இருக்கின்றமையே.

அவர்கள் எந்த பிரதேசத்தினை நம்பி வேட்பாளராக இருந்தாரோ அந்த பிரதேசத்தில் ஆதரவு எனக்கு உள்ளது என்பதால் இவ்வாறு நடைபெற்றது.எனவே, அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இந்த தேர்தலை அவர்கள் கையாளப் போகின்றனர். இந்த சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

No comments