யாழிலும் சண்டை:தேர்தல் ஆணைக்குழு கலகலப்பு?


தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் மகிந்த தேசப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலுக்கும் இடையேயான போட்டுப்பிடிப்பு யாழ்ப்பாணம் வரை நீடித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(14) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

'வேட்பாளர்கள் செல்லும் வாகனங்களில், வேட்பாளர்களின் முகத்தை தவிர வேறு எவரின் முகமும் காட்சிப்படுத்த முடியாது' என ஹூல் தெரிவித்திருந்த நிலையில், இந்த விதிமுறையை மீறி மன்னாரில் ஒரு வாகனம் பொலிஸால் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசப்பிரிய, 'வேட்பாளர்கள் தமது வாகனங்களில் தம் தலைவர்களின் படங்களை காட்சிப்படுத்த முடியும். இது தொடர்பில் ஆணைக்குழுவில் கலந்துரையாடுவதை விடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டாம்' எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று, வடக்கில் இராணுவப் பிரசன்னம் போன்றுதான் தெற்கிலும் இருக்கிறது என்று அதனை மஹிந்த தேசப்பிரிய நியாயப்படுத்த விளைந்த போது, அதற்கு ஹூல்,'இராணுவத்தினர் தமது துப்பாக்கிகளை வாகனத்துக்குள் நீட்டி சோதனை செய்கின்றனர். தற்போது அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இராணுவத்தினர் சகல விடயங்களிலும் தலையிடுகின்றனர். உண்மையில், அவர்கள் தமது உடல்நிலையை கூட பரிசோதிப்பதில்லை. எங்கே செல்கின்றீர்கள்? ஏன் செல்கின்றீர்கள்? என்றே கேட்டு சோதனை நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுக்கிறார்கள்' என்றார்.

இதற்கு பதிலளித்த தேசப்பிரிய, ' முப்படைகளையும் நாடு முழுவதும் அமுல்படுத்தும் வர்த்தமானி அமுலில் உள்ளமையை நினைவில் கொள்க' என்று பதிலளித்தார்.

இதனிடையே தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இலங்கை காவல்துறையினர் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் தேர்தலை சுயாதீனமாக நடாத்துவதற்கான சந்திப்பினை மேற்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது வடக்கில் சில தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம் பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றதென தெரிவித்தார்.

அதாவது வீதிகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இவை நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்தார்.

அரசாங்க நிதியில் அமைக்கப்படும் வீதிகள் சில வேட்பாளர்களினால் திறப்பு விழாக்கள் செய்யப்பட்டு திறக்கப்படுகின்றன. அதனை உடனடியாக நிறுத்தும்படி நான் உத்தரவு பிறப்பித்திருக்கின்றேன். அத்தோடு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பது தொடர்பாக நாம் ஆணைக்குழுவில் ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பில் விரைவில் அந்த அறிவித்தல் வரும். அதே போல வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தல் தினத்தன்று மாலை 4 தொடக்கம் 5 மணி வரை வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.

அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வோட்டு போட்டது தொடர்பில் பொது இடத்தில் பேசியிருக்கிறார். இது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் கடமைகளில் வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துசெல்லும் பணியில் மட்டும் இராணுவத்தினர் பயன்படுத்தபடுவார்கள். தேர்தல் கடமைகள் அனைத்திலும் காவல்துறையினர்; மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அத்தோடு தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு மாத்திரமே உள்ளது. அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments