கோத்தாவுடன் கூட்டமைப்பு டீல்:சிறிகாந்தா?


கோத்தபாய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறி வருகின்றனர். இந்த செயற்பாடானது இரட்டை நாக்கு அரசியலையே வெளிக் காட்டுகின்றது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் வெள்ளைவான் கடத்தல் ஆரம்பமாகும் என்று சொல்லி தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தனர். அதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது கோத்தபாய அரசுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர்.

கோத்தபாய அரசாங்கம் தற்பொழுது வடக்குக்கும் கிழக்குக்கும் செயலணிகளை உருவாக்கி தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனை பல தரப்புக்களும் கண்டித்து வருகின்றனர் இவ்வாறான ஒரு நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவரது அரசுக்கு ஆதரவு தருவோம் என கூறி வருகின்றனர்.

கூட்டமைப்பினர் கடந்த காலத்திலும் ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி முண்டு கொடுத்து வந்தனர். தற்போது கோத்தபாய அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் தாம் அதனை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று பகிரங்கமாகவே கூறிவருகின்றனர் எனவும் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

No comments