நந்திக்கடலும் போகின்றது?
வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் நான்கு முனைகளால் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இவை பறிபோய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளார்; முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்.
மகாவலி எல் வலயத்தின் ஊடாக எப்படி முல்லைத்தீவில் உள்ள காணிகள் அதனுடன் சேர்ந்த நிலங்கள் அபகரிப்புக்குள்ளாகின்றதோ அதேபோல் சத்தமில்லாமல் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் பறிபோய்க்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு என்று சொல்லக்கூடிய இடத்தில் 468 குடும்பங்கள் வட்டுவாகல் கிராமத்தில் 271 குடும்பங்கள் இருக்கின்றன. தனித்தமிழ் சைவக்கிராமமான இந்த கிராமம் இன்று சுற்றிவளைக்கப்பட்டு நந்திக்கடலுடன் சேர்ந்து தமிழர்களின் வாழ்வாதாரங்கள் எல்லாம் நசுக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு விகாரையும் கிடையாது ஆனால் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது ஒரு பௌத்த சிங்கள குடும்பம் கூட இல்லாத தமிழ் கிராமமான வட்டுவாகல் கிராமத்தில் தனியாக பெரிய பௌத்த விகாரை அமைத்து தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் கொண்டுவரும் நோக்குடன் அதனை செய்துள்ளார்கள்.
அதனை சுற்றி 100 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு படைமுகாம் ஒன்று அமைத்துள்ளார்கள் கடற்படை தளம் ஒன்று 617 ஏக்கர் நிலத்தில் அமைத்துள்ளார்கள் வட்டுவாகல் கடற்படை தளம் வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த மக்களின் காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு பாரிய கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment