வேண்டாமென்கிறனர் மருத்துவர்கள்:காவல்துறையோ விடாப்பிடி!


அடையாள அட்டையின் இறுதி எண்களின் அடிப்படையில் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கும் நடைமுறையானது கொரோனா நோய்த் தொற்று பரவுகையை அதிகரிக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ள நிலையில் காவல்துறை யாழில் அதனை அமுல்படுத்த தொடங்கியுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் வெளியே செல்லும் நடைமுறை ஒன்றை காவல்துறை அறிமுகம் செய்திருந்தது.

இந்த முறைமையினால் நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒவ்வொரு தினங்களிலும் ஒவ்வொரு நபர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதிப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று எல்லா வீடுகளையும் தாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் என தெரிவித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையை கருத்திற்கொள்ளாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய இடங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவியதாக பதிவாகியுள்ள நிலையில் அந்த நோயாளிகளை அண்டிய பகுதிகளின் பரவுகை பற்றி மதிப்பீடு செய்யாது, இந்த அடையாள அட்டை நடைமுறை பின்பற்றப்படுவது ஆபத்தானதாகும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆயினும் இன்றைய தினம் யாழ்.நகரப்பகுதியில் காவல்துறை வீதி சோதனையில் குதித்திருந்ததுடன் அடையாள அட்டை இலக்க அடிப்படையில் பொதுமக்களை தடுத்தும் வைத்திருந்தது.

No comments