கொரோனா அற்ற யாழ்ப்பாணம்:உலகிற்கு முன்னுதாரணமாகலாம்!


யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இலங்கை அரசினால் யாழ்.மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்கவென விசேடமாக அனுப்பி வைக்கப்பட்ட சமுதாய வைத்திய அதிகாரி முரளி வல்லிபுரநாதன்.

இன்று குடாநாட்டு ஊடகவியலாளர்களிற்கு கொரோன அறிக்கையிடல் தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்றை நடத்திய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் யாழ்.குடாநாட்டினுள் முட்டாள்தனமாக பொய் கூறி உள் வந்திருந்த சுவிஸ் மதகுருவே நோய் காவியாக இருந்திருந்தார்.ஆனாலும் சுகாதார துறை விழிப்படைந்து அவருடன் தொடர்புபட்ட மக்களை தனிமைப்படுத்தியதன் மூலம் பரவலை ஓரளவிற்கு கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்தது.தொடர்ச்சியான ஆய்வுகளின் பிரகாரம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட புதிய பரிசோதனைகளில் எவரும் நோய் தொற்றுடன் காணப்படவில்லை.ஆனாலும் அபாயம் நீங்கிவிட்டதாக கருத முடியாதென தெரிவித்த அவர் ஆனையிறவு,பூநகரில் கண்காணிப்பு சோதனை சாவடிகளை அமைப்பதன் மூலம் புதிய தொற்றாளர்கள் மற்றும் காவிகளை வடிகட்டுவதன் ஊடாக முன்னுதாரணமான நோய் அற்ற பிரதேசமாக யாழை அறிவிக்கலாமெனவும்; தெரிவித்தார்.

இதனிடையே வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வை முன்னெடுக்க கூடிய பகுதிகள் தொடர்;பில் தாங்கள் பரிந்துரைகளை அரசிடம் செய்திருப்பதாகவும் அரசு இறுதி முடிவை எடுக்குமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே அரச அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு கோவிட் - 19 பிரிவை பார்வையிட்டார்கள் என ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்றுவரை அவர்களால் அந்த பிரிவுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. ஒரு வென்டிலேட்டர கூட வழங்க முடியவில்லையென மற்றொரு வைத்திய அதிகாரி ஆதங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments