பிரதேச சபை பெண் அதிகாரிக்கு மிரட்டல்?

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த கடிதம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வலி.தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச சபையின் அனுமதி எதுவும் பெறாமல் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குறித்த கட்டிடத்திற்கு உரிய அனுமதியைப் பெறுமாறு பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொறுப்பதிகாரி கட்டிட உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இரண்டு, மூன்று தடவைகள் அறிவுறுத்தல் வழங்கியும் இன்றுவரை கட்டிடத்திற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை. இந்நிலையில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்தும் அனுமதியை சபையிடம் கோரியுள்ளார்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக, பிரதேச சபையின் உரிய அனுமதி எதனையும் பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதால் குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்தமாறு தவிசாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையிலேயே வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்கு நேற்று முன்தினம் எச்சரிக்கைக் கடிதம் ஒன்று சென்றது. குறித்த கடிதத்தில் உடுவில் பகுதியில் அமைந்துள்ள உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் அதிகாரியான நீங்கள் தேவையில்லாத விடயங்களில் தலையிட வேண்டாம். அவ்வாறு தலையிட்டால் முன்னர் இருந்த பொறுப்பதிகாரிக்கு நடந்ததே உங்களுக்கும் நடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments