யாழ் வணிகர் கழகம் வெளியிட்ட விசேட தகவல்

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக குடாநாட்டின் அத்தியாவசி பொருட்களின் விநியோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவூட்டும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் (14) யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக உப தலைவர் இ.ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கையில்,

'தற்போதைய நிலையில் வர்த்தகர்கள் பொது மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை திருப்திகரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் இலங்கையில் பொருட்களை உற்பத்திசெய்வோர் தொடர்ந்தும் பொருட்களை விநியோகம் செய்யுமிடத்து பொது மக்களுக்கான பொருட்கள் விநியோகத்தை யாழ் வர்த்தகர்கள் சிறந்த முறையில் மேற்கொள்வார்கள்.

தற்போதைய நிலையில் கொழும்பில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் குடாநாட்டுக்கு பொருட்களை கொண்டு வருவதும் குடாநாட்டிலிருந்து பொருட்களை கொண்டு செல்வதும் எந்த தங்குதடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான முறையில் பொருட்களை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் வர்த்தகர்கள் இரவிலும் தங்கள் வர்த்தக நிலையங்களை நீண்ட நேரம் திறந்து அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

பொதுமக்கள் திடீரென அளவுக்கதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதால் வர்த்தக நிலையங்களில் ஏற்கனவே இருக்கும் கையிருப்புக்களை விட மேலதிகமான பொருட்கள் தேவைப்படுகின்றது. இதன் மூலம் வர்த்தகர்கள் சில நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றார்கள். இது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆகையால் பொதுமக்கள் அளவுக்கதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது நீண்ட காலம் பழுதடையாமல் வைத்துப் பாவிக்கக் கூடியதான உலர் உணவுகளை கொள்முதல் செய்வது சிறந்தது.

பொதுமக்கள் விரைவில் பழுதடையக்கூடிய அல்லது காலவதியாகக்கூடிய பொருட்களை கொள்முதல் செய்வது அவர்களுக்கு பெரிய பாதிப்பபையும் நஷ்டத்தையும் ஏற்படுத்த வழிவகுக்கும்.

அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பில் தனியார் துறையினரே தற்போது முக்கிய விநியோகப்பணியை செய்து வருகிறார்கள். ஆகையால் அந்த பணியை பொது மக்களுக்கு தொடர்ந்தும் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு வர்த்தகர்கள் அக்கறையுடனும், பொறுப்புடனும் செயற்படுகின்றார்கள்.

பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தின் பெரும்பகுதி தனியார் துறையினரிடமே தங்கியிருப்பதனால் அனைத்து தனியார் துறையினரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் செயற்படுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். - என்றார்.

இதேவேளை, பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், மருந்து வகைகள், அரிசி வகைகள் மற்றும் ஏனைய பொருட்களை விநியோகஸ்தர்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கும் போது போதிய கையிருப்பினை பேண வேண்டுமெனவும், பொதுமக்களுக்கான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் தட்டுப்பாடின்றி விநியோகிக்க தயார்நிலையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தல் விடுத்தார்.

No comments