பகிடிவதையால் உயிருக்கு போராடும் மாணவன்

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் பகிடிவதை என்ற பெயரில் நடந்த வன்மச் செயலில் படுகாயமடைந்து தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பசிந்து ஹிருசான் (20-வயது) என்ற மாணவன் தொடர்ந்தும் அதே பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

கடந்த 5ம் திகதி பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் பகிடிவதை என்ற பெயரில் தள்ளிவிடப்பட்ட பாரிய டயர் தலையில் பலமாக தாக்கி படுகாயமடைந்த நிலையில் அன்றைய தினம் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த மாணவனுக்கு ஆரம்பத்தில் 7 மணி நேர சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் இன்று வரையில் மாணவன் ஆபத்தான நிலையிலேயே காணப்படுகின்றார்.

பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர் ஒருவர் பசிந்து ஹிருசான் மீது சில்லு ஒன்றை தள்ளிவிட்டமையால் அவரின் தலைப்பகுதியில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் பசிந்துவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பசிந்துவின் மூளை பகுதி இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயர் கல்வி அமைச்சர் நேற்று அவரின் உடல் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட அறிக்கை தம்வசம் கிடைத்துள்ளதாக தெரிவித்த பதில் பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே, இதில் சிரேஷ்ட மாணவன் தவறிழைத்திருந்தால் அவரின் புலமைப் பரிசில் கொடுப்பனவு முழுமையாக இரத்துச் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் சிகிச்சை பெற்றுவரும் பசிந்து ஹிருசானுக்கு ஏதேனும் வெளிநாட்டு வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு அனுசரனை வழங்க தயார் எனவும் அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

No comments