பாலியல் பகிடிவதை:இருவருக்கு தடை?


மாணவிகள் மீதான பாலியல் பகிடிவதை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி வளாக மாணவர்கள் இருவருக்கே வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கும் தடை விதிக்கப்படவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.இன்று முதல் விரிவுரைகளில் பங்கெடுப்பதற்கு எட்டு மாணவர்களிற்கு இடைக்கால தடையினை யாழ் பல்கலைக்கழகம் விதித்துள்ளதாக வெளிவந்த செய்தியை அத்தரப்புக்கள் மறுதலித்துள்ளன.

ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழக வளவினுள் உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி பீடத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் பாலியல் துன்புறுத்தல் புாிந்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன” என வடமாகாண ஆளுநா் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் தெரிவித்தவை வருமாறு-
“யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.
எனக்குக் கிடைத்த அறிக்கையின்படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை சேகரித்துள்ளனர். 
அத்துடன், அந்த மாணவர்களுக்கு எதிராக – சரியான சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம். வடக்கு மாகாண மாணவர்களது அடிப்படை உரிமைகளும் அவர்களது கல்வி நடவடிக்கைகளும் எமது ஜனாதிபதியின் உறுதுணையோடு முன்னெடுக்கப்படும்.
சீரழிந்து செல்லும் இந்தச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தப் பகிடிவதை தொடர்பான அனைத்துத் தகவல்களும் சமர்ப்பிக்கப்படும்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வடக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு பெற்றோரதும் ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமானவை. அத்துடன், ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் உரிய நேரத்தில் விடயங்களை சுட்டிக்காட்டும் போது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – என்றார்.

No comments