சட்ட நடவடிக்கைக்கு தயார்! ஆனால் - ஆளுநர் கருத்து

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாண அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (10) கலந்து கொண்ட போது இதனை தெரிவித்தார். மேலும்,

தற்போது வடக்கின் கல்வி நிலை பாரிய பிரச்சினைகளை கொண்டதாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது. அதனை சரியாக கட்டியெழுப்புவதற்கு அதிபர்களாக அனைவரும் பாடசாலையில் இருந்து சரியான ஒழுக்கங்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி கையூட்டு பெறுவது, துஷ்பிரயோகங்களில் ஈடுபடுதல், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை ஒழிப்பதற்கும் அதற்கு கடுமையான சட்டங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பாக நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

எனக்குக் கிடைத்த அறிக்கையின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினரை இன்று நான் சந்திக்க இருக்கின்றேன். அத்தோடு அந்த மாணவர்களுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.

வடக்கு மாகாண மாணவர்களது அடிப்படை உரிமைகளும் அவர்களது கல்வி நடவடிக்கைகளும் எமது ஜனாதிபதியின் உறுதுணையோடு முன்னெடுக்கப்படும். சீரழிந்து செல்லும் இந்தச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தப் பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். வடக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு பெற்றோரதும் ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமானவை. அத்தோடு ஊடகங்களும் சமூக அமைப்புக்கள் உரிய நேரத்தில் விடயங்களை சுட்டிக்காட்டும் போது, அவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் - என்றார்.

No comments