சவேந்திரவின் தடையை வரவேற்ற சுமந்திரன்

தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக இராணுவ தளபதிக்கான அமெரிக்க தடையை நாம் காண்கிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று (14) இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும்,

இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூறவேண்டியவராகின்றார்.

ஷவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது. - என்றுள்ளது.

No comments