கல்முனையை பிரித்தார் கோத்தா; உருவானது புதிய சபை

கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டும் சாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி இன்று (15) அதிகாலை வெளியிடப்பட்டது.

இதன்படி குறித்த நகர சபையை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியானது.

1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா ஒன்றிணைத்தார். அவற்றை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர்.

அத்துடன் கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் சார்பில் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments