தலைமையை தாருங்கள் தீர்வு தருவேன்! சங்கரி

தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்போது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள்.
இந்த நிலையில் குறித்த முறையை முன்னிலைப்படுத்தி நாம் போட்டியிட உள்ளோம். கிழக்கில் உள்ள பலருடன் பேசியுள்ளோம். அவர்களும் இணைந்த செயற்படுவதற்கு உள்ளனர். அதேபோன்று வடக்கிலும் அவ்வாறான கூட்டு ஒன்று உருவாக்கப்படும்.
நான் பகிரங்கமான அழைப்பினை விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரும் மீட்டும் இணையுங்கள். எனக்கு வயது 87 ஆகியுள்ளது. இந்த நிலையில் பாரம்பரிய கட்சியினை பாதுகாப்பதற்கான சூழல் தற்போது எழுந்துள்ளது.
வெவ்வேறு காரணங்களை கூறி தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்த பிரிந்து சென்று தமிழரசு கட்சியில் இணைந்தவர்கள் இன்று விட்ட தவறுகளை உணர்கின்றீர்கள் என நம்புகின்றேன்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில்கொண்டு மீண்டும் இந்த கட்சியை பலம் மிக்க கட்சியாக செயற்படுத்த மீள இணையுமாறு அழைக்கின்றேன்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments