இந்திய குடியரசு தினம் யாழில்

இந்தியாவின் குடியரசு நாளின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (26) யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் குடியரசு நாள் நிகழ்வுகள் காலையில் தூதரகத்திலும் முற்பகல் ரில்கோ ஹோட்டலிலிலும் கொண்டாடப்பட்டது.

முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையின் நினைவாலயத்தில் யாழ் கட்டளைத் தளபதி ருவான் வணிக சூரியவுடன் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் காலை 9.00 மணிக்கு யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. தூதரக அலுவலர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர், இந்திய நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என 100ற்கும் மேற்பட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்வுகள் முற்பகல் 10.00 மணிக்கு ரில்கோ ஹோட்டிலில் ஆரம்பிக்கப்பட்டது. வடமாகாண ஆளுனர் திருமதி சாள்ஸ், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர், முப்படைகளின் அதிகாரிகள், காவல் அதிகாரிகள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஸ்ரீமதி யோகவந்தனா குழுவினரின் வீணை இசைக் கச்சேரியும் ஜெயஸ்ரீ குழுவினரின் கதக் நடனமும் அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பாசையூர் சென் அன்ரனிஸ் கலைக்கழகத்தினரின் வீரபாண்டிய கட்ட பொம்மன் நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது.






No comments