தமிழ் இளைஞன் உட்பட மூவருக்கு டுபாயில் சிறை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 இலங்கையர்களுக்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உறவினரை இழந்த மட்டக்களப்பு இளைஞன் மற்றும் இரண்டு சிங்கள இளைஞர்களுக்கே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும், தங்களது கையடக்கத் தொலைபேசியின் வழியாக சமூக ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய படங்களை பகிர்ந்ததாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த குணதாஸ் டிரான் மற்றும் ரமேஷ் பெர்னாண்டோ, விஸ்வா டி சில்வா ஆகியோரே தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹோட்டலொன்றின் பாதுகாப்பு அதிகாரியாகவும், பாதுகாவலராகவும் இருந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 4ஆம் திகதி ஹோட்டலில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டு, நேற்று (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெற்றபோது, அவர்களிற்கு 500,000 டிரிகாம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

எனினும், குறித்த பணத்தை செலுத்த வசதியில்லையென அவர்கள் குறிப்பிட்டதைடுத்து அவர்களிற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மூவரையும் மீட்டு இலங்கைக்கு கொண்டு வர இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments