ரவிகரன் உள்ளிட்ட எழுவருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் (09) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் ஒன்றின் போது நீரியல் வளத் திணைக்களம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் ம.தொம்மைப்பிள்ளை, செல்வபுரம் கடற்றொழில் சங்கத் தலைவர் பி.ச.ஜெ.திலீபன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் பே.பேரின்பநாதன், கோவிற்குடியிருப்பு மீனவர்சங்கத் தலைவர் ம.மி.அன்ரனி, செல்வபுரம் கடற்றொழிலாளர் சங்க பொருளாளர் அ.ஜெயராசன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனங்களின் உப தலைவர் வி.அருள்நாதன்  ஆகியோர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவற்றினையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையிலேயே இன்று ரவிரன் உள்ளிட்ட ஏழு பேர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் ஆகிய இரு தரப்பினரும் இணக்கப்பட்டிற்கு வந்ததற்கமைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

No comments