தயாசிறியை முதலில் விரட்டியடிப்போம்

ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த தீர்வு கிடைக்கப் பெற்றால் தயாசிறியையே முதலில் விரட்டியடிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு நேற்று(செவ்வாய்கிழமை) சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நான் இன்று அரசியலில் வெற்றி பெற்றிருப்பதற்கு சந்திரிகா குமாரதுங்கவே காரணமாவார்.

நான் மாத்திமரல்ல. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் அவரே உருவாக்கினார்.

சிரேஷ்ட தலைவியாக எமக்கு முறையான அரசியலைக் கற்றுக்கொடுத்தார். தனது குடியுரிமை நீக்கப்பட்ட போதிலும் கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றார். எனவே சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது அவ்வாறல்ல. வெள்வேறு கட்சிகளிலிருந்து சுதந்திர கட்சியில் இணைந்தவர்கள் தற்போது கட்சியின் வரலாறு பற்றி பேசுகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாமே சுதந்திர கட்சியை பாதுகாப்போம்.

அத்துடன் இந்த சம்மேளனத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் பதவிகள் அல்லது உறுப்புரிமை நீக்கப்படும் என்று யாரும் அச்சமடையத் தேவையில்லை.

சந்திரிகா குமாரதுங்கவுடன் நானும் இணைந்து முன்னின்று அனைவரையும் பாதுகாப்போம். அச்சமின்றி அனைவரும் எம்முடன் ஒன்றிணையுங்கள். இதுவே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள இறுதி வாய்ப்பாகும்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் கட்சி செயலாளருக்கு எதுவும் செய்ய முடியாது. இவ்வாறானவர்கள் எத்தனை கட்சிகளுக்கு தாவியிருக்கிறார்கள்? அவர்களால் சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?

தந்தையும் தாயும் கட்டியெழுப்பிய இந்த கட்சியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க நீக்கப்படுவார் என்று தயாசிறி ஜயசேகர கூறுகிறார்.

இந்த தேர்தலில் சிறந்த தீர்வு எமக்கு கிடைக்கப் பெற்றால் காதைப் பிடித்து நாமே உங்களை கட்சியிலிருந்து அப்புறுப்படுத்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments