கோரிக்கைக்கு உத்தரவாதம் அளிக்காத வேட்பாளருக்கு ஆதரவு இல்லை!

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒருவருக்கே ஆதரவு வழங்குவோமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். துரைராசசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பல வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி விட்டார்கள். எமது கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் எல்லாத் தேர்தல்களிலும் வலியுறுத்துகின்ற எமது இனப்பிரச்சனை தொடர்பான தீர்வு என்கின்ற விடயமே பிரதானமானது. இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இது எமது கோரிக்கையாக இருக்கும்.

அதேவேளை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாக கூடுதல் அக்கறை கொள்வோம். இதேவேளை வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து, பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிகின்றோம்.

எமது தலைவரையும் இது தொடர்பாக அணுகியிருப்பதாக அறிகின்றோம். ஆனால் எங்களிடம் அவ்வாறான அபிப்பிராயம் இல்லை. என்றார்.

No comments