மன்னாரில் கால்நடை வளர்ப்போர் போராட்டம்

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்திற்கு முன்னால் இன்று (வியாழக்கிழமை) இந்த போராட்டம் நடைபெற்றது.

உயிலங்குளம் விவசாய கேட்போர் கூட மண்டபத்தில் காலபோக சிறு போகம் தொடர்பான கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் ஒன்று கூடி குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டையடம்பன் பகுதியில் மேய்ச்சல் நிலம் இனங்காணப்பட்ட போதும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டினர்.

ஆனால் தற்போது மேய்ச்சல் நிலமாக இனங்காணப்பட்ட குறித்த பகுதியில் பெரும்போக நெற்செய்கைக்கான அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

எனவே குறித்த பகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதனால் அதனை நிறுத்தி கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக மாற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, நாளை காலை 10 மணிக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

No comments