கொடூர இந்திய இராணுவம் நிகழ்த்திய பிரம்படி படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம்- கொக்குவில், பிரம்படி படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது.

படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும்  அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.

இப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,  துப்பாக்கியால் சுட்டும், கவச வாகனம் (செய்ன்பிளக்) கொண்டு வீதியில் போட்டு நசுக்கி படுகொலை செய்யப்பட்டனர்.

அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழ் இனப்படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது. இந்நிலையில் பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாக சிறிய நினைவு தூபியொன்று அமைக்கப்பட்டது.

குறித்த நினைவுத்தூபியிலேயே இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



No comments