இலங்கை இராணுவ மேற்பார்வையில் மீண்டும் சண்டை?


யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில்,  நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம், இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், 2ஆம், 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த முரண்பாடு இன்று வரை நீடித்த நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் கைகலப்பில் ஈடுபட்டனர்.அந்த இடத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் மாணவர்களின் மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக, அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 
இதேவேளை, இந்த மோதலை தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்த பொதுமகன் ஒருவரை, சிங்கள மாணவர்கள் சிலர் அவதானித்து இராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பொது மகனை சிறிது தூரம் அழைத்துச் சென்ற இராணுவத்தினர், அவரைக் கடுமையாக அச்சுறுத்தியதுடன், அலைபேசியைப் பறித்தெடுத்து ஒளிப்படங்கள் அனைத்தையும் அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை, யாழ்ப்பாணம் பரமேஸ்வராச்சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்த சிங்கள மாணவர்கள் சிலர் அங்கும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

No comments