மலையக இளைஞர்களை ஆயுதம் தூக்க வைக்கப் போகிறீர்களா - வடிவேல் சுரேஸ்

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெருந் தோட்ட தமிழ் இளைஞர்களை உரசிப்பார்க்கின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்க முயற்சிக்கிறார்களா என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். நேற்று (31) பாராளுமன்றில் உரையாற்றும் போதே இதை தெரிவித்தார். மேலும், பெருந்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர் இனவாத ரீதியில் செயற்படுகின்றனர். எல்ல விளையாட்டு மைதானத்தில் எமது இளைஞர்கள் விளையாட எல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி தடை விதித்துள்ளார். இம்மைதானம் வெள்ளைக்காரர் காலம் முதல் உள்ளது. 5 தலைமுறைகளாக எமது இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அது தனியாருக்கு சொந்தமானது எனக் கூறி பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் எமது இளைஞர்கள் விளையாட தடை உத்தரவு பெற்றுள்ளார். தோட்டக் கம்பெனி முதலாளிமார்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளே இவ்வாறான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள். முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்கி விட்டார்கள். பெரும்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? என்று கேட்கின்றேன். எல்ல பொலிஸார் அவசரகால சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு எமது இளைஞர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றேன். என்றார்.

No comments