சொல்லாமல் செய்து காட்டியவர் கோத்தாபய - மஹிந்த உரை

ஒழுக்கமும் சட்டமும் இல்லாமல் இந்நாட்டை முன்நகர்த்த முடியாது. ஒழுக்கத்தை நிலைநிறுத்த நாட்டுக்கு ஒழுக்கமான மனிதன் தேவை என்று எதிர் கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இன்று (11) மாலை நடைபெற்ற தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் அனைவரும் ஜாதி, மதங்களுக்கு உட்படாமல் ஒன்றாக இருக்கக்கூடிய கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இருந்த பசில் ராஜபக்ஷவிற்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இந்நாள் வராமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் செயற்பட்டது. ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிற்கு வராமல் இருக்க செய்வதற்காக அரசியலமைப்பை மாற்றியது. அவர்கள் அவ்வாறான விடையங்களை செய்து எமது சுதந்திரத்தை பறித்தனர். இந்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சுதந்திரத்தை அர்ப்பணிப்பு செய்தேன்.

எந்தவொரு மதம் தொடர்பிலும் தற்போதைய அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. வெறுப்பினூடாக அரசியலை எடுத்து செல்ல முடியும் என தற்போது தீர்மானமாகிவிட்டது.

கொழும்பில் குப்பை கூலங்களில் துர்நாற்றம் வீசம் போது மக்களுக்கு எங்கள் நினைவு வந்தது. கொச்சிக்கடையில் இருந்து மட்டக்களப்பு வரையில் குண்டுகள் வெடித்த போது தான் மக்களுக்கு எங்களது நினைவு வந்தது.

எந்தவொரு மதத்தினருக்கும் தனது வணக்கஸ்தலங்களுக்கு செல்லக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும். அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை என்று எண்ணக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும். 365 நாட்களும் நாட்டை பாதுகாக்க கூடிய ஒருவர் நாட்டிற்கு தேவை, தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

நான் செய்வேன் என்று சொல்லும் ஒருவர் அல்லாமல் செய்து காட்டிய ஒருவரை கொண்டு வரவேண்டும், மக்களை ஏமாற்றாத ஒருவர் வேட்பாளராக ​வேண்டும். அன்று ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இன்று அரசியல் எனும் வார்த்தையை வெறுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் ஒருவரை மக்கள் வேண்டிக் கொள்கின்றனர். என்னுடைய விருப்பத்தை விடவும் நாட்டின் விருப்பமே எனக்கு முக்கியம்.

மக்கள் கூறியவற்றை அவதானத்திற் கொண்டு புதிய ஒருவரை தேடினேன். நான் தெரிவு செய்யாவிடினும் கோட்டாபய ராஜபக்ஷ உங்களது சகோதரர் ஆகிவிட்டார். எனவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குகிறேன். என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். கோட்டாபய எப்போதும் தன்னை ஜனாதிபதியாக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை. உங்களை வலுப்படுத்துவதற்காக அன்றி கோட்டாவை வலுப்படுத்தவதற்காக அவரை நியமிக்கவில்லை. என்றார்.

No comments