கட்டுவப்பிட்டியில் அஞ்சலி செலுத்தினார் இங்கிலாந்து பேராயர்

அங்கிலிக்கன் திருச்சபையின் இங்கிலாந்து - கெண்டர்பரி பேராயரும் ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்றின் மேலவையான ஹவுஸ் ஒப் லோர்ட்ஸ் (HOL) உறுப்பினருமான ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (29) இலங்கை வந்துள்ளார்.

அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் இன்று காலை 10.30 மணியளவில் ஏப்ரல் 21 பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு விஜயம் செய்தார்.

அவரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வரவேற்றார்.
பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆண்டகை அவர்கள் சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதன் பின் குண்டுத்தாக்குதலின் சிதைவுகளை பார்வையிட்டு குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ஜஸ்டின் வெல்பி ஆண்டகை, "குண்டுத்தாக்குதல் செய்தியை கேட்டு நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். சொல்ல முடியாத வேதனைக்கு ஆளானேன். அன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்க கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்". என்றார்.

இதன்போது குண்டுத்தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு நிவாரணப்பொதிகளும் பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகையால் வழங்கிவைக்கப்பட்டது.

No comments