மக்கள் பிரதிநிதிகளை விட வடக்கில் அதிகாரிகளிற்கே அதிகாரம்?


முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது பதவி பறிப்பிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் முதல்வருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நீதியரசர்கள் ஒரு முக்கியவிடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகின்றது. அதாவது, டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்ற கேள்வியை நீதியரசர்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்துப் பற்றி நீதியரசர்கள் ஆராய்ந்திருக்கத் தேவையில்லை. ஆளுநர் தன் கடமையில் தவறிவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும். 

எனினும், ஆளுநருக்கே சகல உரித்துக்களும் உண்டு என்று நீதிமன்றம் கூறுவதில் இருந்து 13வது திருத்தச்சட்டத்தின் குறைபாட்டை மக்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டிய அரசியல் யாப்பையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு‘புதியயாப்பு’‘புதியயாப்பு’என்று துள்ளுகின்றது. ஆளுநர் அரசாங்க முகவர் முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர். மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்றசட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இனியாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க முன்வருவார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments