கிரித்தலையிலிருந்த தமிழ் இளைஞர்கள் எங்கே?


எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக சந்தேகிக்கப்படும இராணுவத்தினரிடம் காணமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என கலாநிதி இரா.சிறீஞானேஸ்வரன் கோரியுள்ளார்.

ஊடகர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க அரசுதரப்பு முன்வரவேண்டும் என தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ''2019.ஒகஸ்ட் 10ம் திகதி டெய்லி மிரர்பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் கிரித்தலை இராணுவமுகாமிற்பணியாற்றிய லெப்டினட்கேணல் சம்மி அர்ஜூன் குமாரரத்ன உட்பட ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக எக்னெலிகொட தொடர்பாக கொலைக்குற்றச்சாட்டுப்பதிவு செய்து நீதாய நீதிமன்றில் அக்குற்றச்சாட்டை விசாரணைக்கு உட்படுத்துமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்'' 

வழக்குத்தொடுனர்களின் தரப்பானது குறித்த இராணுவமுகாமானது பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத்தகவல்களைத்திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது என்றும், ஆரம்பத்தில் அங்கு ஒன்பது விடுதலைப்புலிகள் உயிருடன் தடுத்துவைக்கபட்டிருந்தனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2009ம் ஆண்டுபோர் முடிவடைந்த போது சுமதிபால சுரேஸ்குமார் என்ற விடுதலைப்புலி உறுப்பினர் சரணடைந்து குறித்த இராணுவமுகாமில இராணுவப்புலனாய்விற்கு ஒத்துழைப்பு நல்கியமையும், அவர் எக்னெலிகொடவுடனும் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் எக்னெலிகொட தனது கழிவகற்றல் கடமைகளைக்கூடச்செய்யமுடியாதளவு தாக்குதலுக்குள்ளாகி சிறைக்கூண்டில் இருந்ததை மற்றொரு தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிச்சந்தேகநபரான எதிர்மன்னசிங்கம் அருச்சந்திரன் என்பவர்தெரிவித்திருந்ததாக வழக்குத்தொடுனர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வழக்கின் மிகப்பிரதானமான சாட்சியாக அரசுதரப்புச்சாட்சியாக மாறியுள்ள இராணுவ அதிகாரி ஜெயசுந்தர முதியான்சலாகே ரண்பண்டா எக்னெலிகொடகாணாமலாக்கப்பட்டமை தொடர்பாக தனதுசாட்சிகளை வழங்கியுள்ளார்.

எனவே மேற்கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்குறித்த முகாமில் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்ட பலதமிழ் இளைஞர்கள் விசாரணைகளுக்காகத்தடுத்துவைக்கப்பட்டிருந்தமை தெளிவாகின்றது.

அரசதரப்புசாட்சியாகமாறியுள்ள ரண்பண்டா, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒன்பது இராணுவத்தினர் மற்றும் கிரித்தலை இராணுவ முகாமின் ;புலனாய்வுப்பதிவுகளைக்கையேற்ற இராணுவ அதிகாரி மேஜர் பீரிஸ் ;ஆகியோரிடம் மேலும் விசாரணைகளைத்தொடர்வதன் மூலம் எத்தனை தமிழ் இளைஞர்கள் அங்கு தடுத்துவைக்கப்படட்டிருந்தார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது?என்பது பற்றி அறிந்து கொள்ளமுடியும் என தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் தெரிவித்தார்.

No comments