பதவி ஏற்புக்கு வரவில்லை புதிய கணக்காளர்! ஏமாற்றத்தில் கல்முனை வடக்கு!

அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச சபையின் கணக்காளர் தனது பொறுப்புக்களை ஏற்க வரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

கல்முனைப் உப பிரதேச சபையை தரமுயர்த்தக்கோரி சமயத் தலைவர்கள், பிரதேசபை உறுப்பனர்கள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திய ஒரு வார உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினையடுத்து இப்பிரதேச சபையை தரமுயர்த்தும் முதல் நடவடிக்கையாக கணக்காளர் ஒருவரை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.

உகண நகரசபையில் பணியாற்றும் தமிழர் ஒருவரே கணக்காளராக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது. எனினும் துணைக் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படாமையால் கணக்காளர் பொறுப்புக்களை ஏற்க வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இன்று புதன்கிழமை புதிய கணக்காளர் பதிவி ஏற்பார் என்ற நிலையில் பதவியேற்பு நிகழ்வுக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் துணைக் கணக்காளர் நியமிக்கப்படாமையால் புதிய கணக்காளர் பதவியேற்புக்கு வரவில்லை என்று கிழக்குச் செய்திகள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments