மரணித்தோருக்கு நவாலியில் நினைவேந்தல்!


நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் 147 பேர் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்டதன் 24ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை இதே நாளன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.
அன்று அதிகாலை சூவலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இன்று மாலை படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபி முன்பதாகவும் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களது குடும்பங்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன.

No comments