பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு ஆபத்து எச்சரிக்கை!

பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு ஏற்படும் ஆபத்து குறித்த திடுக்கிடும் தகவல் ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது.

உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் போத்தல்களை எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி மினரல் தண்ணீர் போத்தல்களை மக்கள் வாங்கி பருகுகின்றனர். 

இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் போத்தல்களிலேயே கிடைக்கின்றன.  அதுமட்டுமின்றி குளிர்பானங்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் வருகின்றன.

இந்நிலையில் பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்பவர்கள் ஆண்டுக்கு 52 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக ஆய்வு ஒன்றில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் சிறு பிளாஸ்டிக் துகள்கள் எங்கும் பரவி காணப்படுகிறது. மீன்கள், உணவுகளை அடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் வாயிலாகவும் பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்வதாக கூறுகின்றனர். 

இவற்றிலும் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்துவோருக்குதான் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த துகள்கள் திசுக்களில் பரவி நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கிறது.  ஒரு குழந்தை ஆண்டுக்கு 40 ஆயிரம் துகள்களை உட்கொள்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

-பழனி-

No comments