இரண்டு போராட்டங்கள் ஆனால் இரண்டு முடிவுகள்!

மூன்று முஸ்லிம் பிரமுகர்களின் பதவி நீக்கம் கோரி புத்த பிக்கு மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் மூன்று நாட்களில் வெற்றியில் முடிவடைந்துள்ளது.

ஆனால் அதேவேளை காணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த 800 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்த முடிவும் இன்னும் கிடைக்கவில்லை.

அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விடுதலை செய்யப்படவில்லை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் வரை நடை பவனி சென்றனர். அதற்கும் அரசு மதிப்பு தரவில்லை.

கேப்பாப்புலவு மக்கள் தம் நிலத்தை கோரி இரண்டு வருடமாக வீதியில் இருந்து போராடுகின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு நிலம் கிடைக்கவில்லை.

ஒரு பிக்குவின் உண்ணாவிரதத்திற்கு 3 நாட்களில் முடிவு வழங்கிய அரசு தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எந்த முடிவையும் வழங்குவதில்லை.

இத்தனைக்கும் இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி இக் கணம்வரை தமிழ் எம்பி களின் ஆதரவினால்தான் காப்பாற்றப்பட்டு வருகிறது.

இந்த பிக்குவின் உண்ணாவிரதம் தமிழ் மக்களுக்கு சில விடயங்களை கற்று தந்துள்ளது

(1)தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்தை  எந்தவொரு சிங்கள அரசும் மதிக்கப் போவதில்லை. எனவே அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற முடியாது.

(2அனைத்து முஸ்லிம் பிரமுகர்களும் ஒற்றுமையாக பதவி விலகியுள்ளனர்.  ஆனால் தமிழ் மக்களுக்காக ஒரு தமிழ் எம்.பி மட்டுமல்ல ஒரு பிரதேசசபை உறுப்பினர்கூட பதவி விலகவில்லை.

(3)மூன்று முஸ்லிம் பிரமுகர்களின் பதவிக்கு ஆபத்து என்றவுடன் அனைத்து முஸ்லிம் பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து பதவி விலகியுள்ளனர். ஆனால் எமது தலைவர் சம்பந்தர் அய்யா தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோனபோது சொகுசு பங்களாவை கெஞ்சிப் பெற்றுள்ளார்.

- பாலன் சந்திரன்-

No comments