மைத்திரியே தடுத்தார் - ஹேமசிறி பெர்னாண்டோ பரபரப்பு தகவல்

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை .அவர்களை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆஜராகி சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது,

பிரதமர் ,பொலிஸ் மா அதிபர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை .அவர்களை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி என்னிடம் கூறினார்.அன்று முதல் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதிவரை தேசிய பாதுகாப்பு சபையின் நான்கு கூட்டங்கள் நடந்தன.

இரண்டு தடவைகள் நான் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதிக்கு விளக்கிக் கூற முயன்றேன்.ஆனால் அரச புலனாய்வுப் பணிப்பாளர் தம்மிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டதாக ஜனாதிபதி என்னிடம் சொன்னார்.நான் பதவியில் இருந்த ஐந்து மாத காலத்தில் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விபரிக்கும் நடைமுறை இருந்ததில்லை. அரச புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கும் ஜனாதிபதிக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.நான்கு வருட காலம் ஜனாதிபதிக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுப் பணிப்பாளர் ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.

பாதுகாப்பு செயலாளரான நான் எனது அமைச்சரை சந்திக்க கூட முடியாத நிலையில் இருந்தேன் இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை கூட சந்திக்க கஷ்டமாக இருந்தது.அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை.ஒரு கையொப்பம் பெறவே மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
ஏப்ரல் 9 ஆம் திகதியில் இருந்தே அச்சுறுத்தல் இருந்ததால் வழமைபோல அந்த தகவலையும் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு கூறியிருக்குமென நான் யூகித்தேன்.தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் என்னை சந்திக்க அழைத்தாலும் அவரை சந்திக்க செல்ல ஜனாதிபதி என்னை அனுமதிக்கவில்லை.

– என்றார் ஹேமசிறி பெர்னாண்டோ

No comments