243 பேருடன் காணாமல் போன இந்திய படகு: அரசை அணுகிய உறவினர்கள்

கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூசிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 12 அன்று தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூசிலாந்து நாட்டை நோக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் பயணத்தை தொடங்கியிருந்தனர். பயணத்தை தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் அவர்களின் இருப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை (மே 20) ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள வெளியுறவுத்துறை பேச்சாளர் ரவீஷ் குமார், “பசிபிக் கடலை நோக்கி இப்படி ஒரு படகு சென்றிருப்பதை கேரள அரசாங்கம் தெரிவித்திருந்தது. அந்த பகுதியில் உள்ள நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ள போதிலும், எந்த நாட்டிடமிருந்தும் (படகு குறித்த) எந்த தகவலும் கிடைக்கவில்லை,” என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 12நாள் குழந்தை உள்பட 85 குழந்தைகள் அப்படகில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும் பகுதியினர் தெற்கு டெல்லியில் உள்ள மதாங்கீர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் எனக் கூறப்படுகின்றது.

இவர்களின் நிலைக்குறித்த கண்டறிய படகில் சென்றவர்களின் விவரங்களை உள்துறை, வெளியுறவுத்துறை, டெல்லி அரசாங்கம், தேசிய மனித உரிமை ஆணையகம் உள்ளிட்ட பலத்தரப்புக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனுப்பியிருக்கின்றனர்.

மோசமான மற்றும் புயல்காற்று அதிகமுடைய இந்தோனேசியா- ஆஸ்திரேலியா கடல்பரப்பிடையே தான் இப்படகு பெரும்பாலும் சென்றிருக்கக்கூடும் என எண்ணப்படும் நிலையில், அடுத்தக்கட்டமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

No comments