மிருசுவில் படுகொலை! அகப்பட்டது ஒன்று!


யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரால், சுருக்கமுறையற்ற விசாரணையின் நிறைவில் முன்வைக்கப்பட்ட சான்றாதாரங்களை தனது தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புவனகே அலுவிகார, சிசர ஜே டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, நளின் ஜெயலத் பெரேரா மற்றும் முர்டூ எம்.பி.பெர்னான்டோ ஆகிய அடங்கிய அமர்வு கடந்த 25ஆம் திகதி வழங்கியது.

2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 19ஆம் திகதி மிருசுவில் பகுதியில் தனது வீடுகளைப் பார்வையிடச் சென்ற 5 வயதுக்கும், 41 வயதுக்கும் இடைப்பட்ட தமிழர்கள் எட்டுப் பேர் காணாமற்போயிருந்தனர். மறுநாள் இவர்கள் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரின் பிடியில் இருந்து, காயங்களுடன் தப்பிய ஒருவர், இந்த தகவலை வெளிப்படுத்தியதை அடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இதையடுத்து, 16 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சாவகச்சேரி நீதிவானாக அப்போது, தற்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமையாற்றினார்.

15 இராணுவத்தினரையும் விளக்கமறியல் வைத்த நீதிவான் அன்னலிங்கம் பிரேமசங்கர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இராணுவப் பொலிஸார் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரின் முன்னிலையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டு அவை மீட்கப்பட்டன.

15 இராணுவத்தினரில் 10 பேரை விடுவித்த சட்ட மா அதிபர் திணைக்களம், 5 இராணுவத்திருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தது. 19 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் லலித் ஜெயசூரிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் வழங்கப்பட்டது.

இதன்படி, ஸ்ராப் சார்ஜன்ட் சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ இளநிலை அதிகாரி குற்றவாளியாக காணப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏனைய நான்கு படையினருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகளில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி, அவர்கள் நால்வரையும் நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

பின்னணி
2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில் இடம்பெற்ற சம்பவத்தில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் (வயது-5) ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த எண்மரும் இராணுவத்தினர் 6 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட பிரசாத்திற்கு அப்போது ஐந்து வயது மட்டுமே ஆகியிருந்தது.

இந்த எண்மரும் மிருசுவிலுள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீவிர போர் இடம்பெற்றிருந்தது. ஆனால் குறுகிய காலம் போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்தது. அப்போது மிருசுவிலுள்ள தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக சிலர் உடுப்பிட்டியிலிருந்து மிருசுவிலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் வழமையாக தமது காணிகளைப் பார்வையிட்டு விறகுகளை எடுத்து வருவது வழமையான செயலாகும்.

தந்தை, ஐந்து மற்றும் 13 வயது இரண்டு பிள்ளைகள், பிறிதொரு தந்தை மற்றும் அவரது 13 வயது மகன், இரண்டு மைத்துனர்கள் ஆகியோர் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பிரதான சாட்சியம் பொன்னுத்துரை மகேஸ்வரன் ஆவார்.

டிசம்பர் 19, 2000 அன்று காலை 10 மணியளவில் இவர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் தமது சொந்த நிலங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விறகுகளைச் சேகரிப்பதற்காகவே இவர்கள் சென்றிருந்தனர்.

பி.ப 4 மணி, சிறுவன் ஒருவனுக்கு கொய்யாப்பழம் சாப்பிட ஆசையாக இருந்தது. அதனால் இவர்கள் அந்த மரத்திற்கு அருகில் சென்றனர். இதன் பின்னர் இவர்களை இரண்டு இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். ஒருவன் துப்பாக்கி வைத்திருந்தான். மற்றவனின் கையில் கத்தி இருந்தது. இவ்விருவரும் திரும்பிச் சென்று மேலும் 2-3 பேருடன் அந்த இடத்திற்கு வந்தனர். தமது நிலங்களில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றவர்களில் ஒருவருக்கு ஒரு கை இல்லை. இதனை மிதிவெடி விபத்தின் போது இழந்திருந்தார்.

மிதிவெடி விபத்தில் கையொன்றை இழந்திருந்த நபரிடம் ஒரு மணித்தியாலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரது கண்களும் கட்டப்பட்டன.
பிரதான சாட்சியக்காரரான மகேஸ்வரனின் கண்கள் கட்டப்பட்ட போது, அவர் மயக்கமுற்றுவிட்டார். இதனால் இவர் மீண்டும் எழுந்திருக்கும் வரை என்ன நடந்ததென்பது தனக்குத் தெரியாது என இவர் கூறினார்.
தன்னை இராணுவத்தினர் மலகுழி நோக்கித் தூக்கிச் செல்வதைத் தான் உணர்ந்ததாகவும் சாட்சியக்காரர் தெரிவித்தார். மலக்குழியின் அருகில் இரண்டு இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர். மலக்குழியிலிருந்து இராணுவத்தினர் சத்தமிட்டதையும் தன்னால் கேட்க முடிந்ததாக இவர் கூறினார்.

தனக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்தவுடன் இவர் ஒருவாறு இராணுவத்திடமிருந்து தப்பிச் சென்றார். அப்போது மாலை ஆறு மணி. இவரது சாரத்தால் இவர் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தார்.

இந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட ஒரு பிளட்டூனைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாளே அந்த இடத்திற்கு வந்திருந்தனர். இந்தப் பிரதேசம் தொடர்பாக அவர்கள் பரிச்சயம் பெற்றிருக்கவில்லை.


இந்த இடத்தில் எழும் எந்தவொரு துப்பாக்கிச் சத்தமும் சந்தேகத்தையே தோற்றுவிக்கும். அவ்வாறானதொரு காலப்பகுதியிலேயே இப்படுகொலை இடம்பெற்றது.

ஆகவே மகேஸ்வரன் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடும் போது அவர்கள் மகேஸ்வரனைக் குறிவைத்துச் சுடமுடியவில்லை. மகேஸ்வரனுக்கு அந்த இடம் மிகவும் பரிச்சயமானது. அதனால் அவர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தனது சித்தி வீட்டிற்குத் தப்பிச் சென்றார். 


இவர் அரை நிர்வாணமாகவே அங்கு சென்றிருந்தார். அதனால் சித்தி வீட்டார் பயப்பட்டனர். இவர் முழு விடயத்தையும் அவர்களிடம் தெரிவித்துவிட்டு காட்டிற்குள் அன்றிரவைக் கழித்தார்.


இதன்பின்னர் இவர் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குச் சென்று நடந்த விடயத்தைத் தெரிவித்தார். இதன் பின்னர் இவரது உடலில் ஏற்பட்ட சிறு காயங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஐ.நாவிடம் முறையிட்டனர்.


 இது தொடர்பில் மிகத் துரிதமான விசாரணை மேற்கொள்ளுமாறு இராணுவ உயர் கட்டளை அதிகாரி கட்டளையிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக இராணுவப் பொலிஸார் மகேஸ்வரனிடம் விசாரணை செய்தனர். ஆனால் இவர்கள் தொடர்பில் மகேஸ்வரன் அச்சப்பட்டார். இறுதியில் தமக்கு ஒத்துழைப்புத் தருமாறு அவர்கள் மகேஸ்வரனை நம்பிக்கை கொள்ளச் செய்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மகேஸ்வரன் அழைத்துச் செல்லப்பட்டார். மலசலகூடக் குழிக்கு அருகில் சென்ற பொது அங்கே குருதிக் கறைகள் இருப்பதை இராணுவப் பொலிஸார் அடையாளங் கண்டனர். மலசலகூடத்தின் குழிக்குள் அவர்களது சடலம் போடப்பட்டதாக மகேஸ்வரன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மலசலகூடக் குழி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இறந்த ஆடு மட்டுமே இருந்தது. மகேஸ்வரன் தப்பிச்சென்றதை குற்றவாளிகள் அறிவர்.
அதனால் குற்றவாளிகள் தமது குற்றத்தை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட உடலங்களை அங்கிருந்து அகற்றிவிட்டனர். அதற்குப் பதிலாக இறந்த ஆடும் அதன் இரத்தமுமே அங்கே காணப்பட்டது.
இக்கொலை வழக்கை விசாரணை செய்த இராணுவப் பொலிஸ் தலைமை தொடர்ந்தும் முயற்சி செய்தது. இறுதியில் அந்த இடத்திலிருந்து இராணுவச் சீருடை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சீருடை கஜபா படைப்பிரிவின் சிறப்பு பிளட்டூனுக்குச் சொந்தமானதாகும்.
ஆகவே அவர்கள் இந்த பிளட்டூன் சிப்பாய்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் ஆட்டை அடித்துக் கொன்றது யார் எனக் கேட்ட போது, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தான் தானென ஒப்புக்கொண்டார்.
அதன்போது மகேஸ்வரன் உடனடியாகக் குற்றவாளியை இனங்கண்டு கொண்டார். இதன்பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது நடந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் பொலிஸாரிடம் பிரதான குற்றவாளி ஒப்புவித்தார்.
இதன்பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தை இராணுவக் பொலிஸார் கண்டுபிடித்தனர். இந்த இடம் ஆரம்பத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மலக்குழியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலிருந்தது. படுகொலை செய்யப்பட்டு நான்காவது நாள் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.

இந்த வழக்குத் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு அறிக்கையிடப்பட்டது. இதன் பின்னர் இராணுவத் தளபதி இக்கொலை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தார். 
இதனை ஆராய்வதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. இந்த வழக்கானது கொடிகாமம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது. 


கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கொண்டு உறவினர்களால் அடையாளங் காணப்பட்டன. ‘எல்லா உடலங்களின் கழுத்திலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இவ்வாறு வெட்டியிருக்க முடியும். 
அடையாள அணிவகுப்பில் மகேஸ்வரன் குற்றவாளிகளை அடையாளங் காண்பித்தார்.


மலக்குழியில் இருந்த இரத்தக்கறையானது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அது மிருகம் ஒன்றின் இரத்தமல்ல எனவும் மனிதர்களின் இரத்தம் என்பதும் நிரூபணமானது. இதன் மூலம் மகேஸ்வரன் உண்மையைக் கூறுகின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

No comments