ஆட்சி கவிழ்ப்பு நோக்கமில்லை:மகேஸ் சேனநாயக்க?


இலங்கை இராணுவம் தொழில் ரீதியில் ஒழுங்குகளை பேணிவருகின்ற ஒழுக்கமுள்ள(?) ஒரு பிரிவினர் எனவும், இதனால் எக்காரணம் கொண்டும் சட்ட முரணான நடவடிக்கைகளில் இராணுவம் சம்பந்தப்படாது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்துக்காவது நாட்டின் அரசாங்கத்தை ஏற்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து இராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு தான் பதிலளித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியை இராணுவத் தளபதி முற்றாக நிராகரித்துள்ளார்.
நாட்டு மக்கள் இராணுவத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும், நாட்டு மக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பை வழங்குவதில் இராணுவம் பிரதான பொறுப்பு வகிப்பதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இராணுவம் நாட்டின் தலைவரான ஜனாதிபதியின் கட்டளைக்கு ஏற்ப, நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து செயற்படுகின்றது. இதனால், நாட்டின் தலைவருக்கோ, அரசியலமைப்புக்கோ எதிராக ஒருபோதும் இராணுவம் செயற்படாது எனவும் இராணுவத் தளபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தை இராணுவம் பொறுப்பேற்றால் சிறந்தது என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

No comments