அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - மைத்திரி


இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மீது அந்தந்த நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயங்களை அவர் எடுத்துரைத்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜேர்மன், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதச் சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது தூதுவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியிருக்கின்றது எனவும் உறுதியளித்தார்.

No comments