இனவெறுப்புத் துண்டும் 600 கடிதங்களுடன் அமைச்சு அதிகாரிகள் கைது

ஜனாதிபதிக்கு அவதூறு பரப்பும் வகையிலும் இன வெறுப்புக் கருத்துக்களைக் கொண்டதுமான 600 கடிதங்கள் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் மூவரும் அமைச்சரவையில் மூத்த அமைச்சர் ஒருவரின் ஆதாரவாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன்,  சமூக இடங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தகவல்களையும் வெளியிடுவோர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

“நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து தபால்கள் அஞ்சல் திணைக்களத்தால் சோதனையிடப்படுகின்றன. சந்தேகத்துக்கு இடமான – அநாமதேயக் கடிதங்கள் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.

இதில் இதுவரை 600 கடிதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலும் இனங்கள் – சமூகங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் அந்தக் கடிதங்கள் காணப்பட்டன.

இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments