ஊடகவியலாளர்களுக்கும் கடும் சோதனை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக செய்தி சேகரிப்புக்கு செல்லும் ஊடகவியலாளர்களும் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.

வடமராட்சி கிழக்கு மணற்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முகப்பினை நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாச ஆண்டகை திறந்து வைத்தார்.

அந்நிகழ்வுக்கு சென்ற சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் உடற் சோதனையின் பின்னரே தேவாலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் , தேவாலயத்தை சூழ நூறுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளம் காட்டிய பின்னரும் அவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களின் உடமைகளையும் கடும் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

No comments