ரிஷாத், ஹிஸ்புல்லாவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகிய இருவரையும் உடன் விசாரணைக்கு உட்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இருவருக்கும் எதிராகப் பொலிஸ் தலைமையகத்துக்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைத்தன.

அவை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகிய இருவருக்கும் தொடர்புகள் இருந்தன என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும், அவர்களுடன் பதவி நிலையைக் கருத்தில்கொண்டு பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தாத நிலையில் அவர்களுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகிய இருவரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது.

No comments