கொல்லப்பட்டவர்களில் 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்!!

கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் கொல்லப்பட்ட 15 பேரில் 6 பேர் தற்கொலைதாரிகள் என நம்பப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சண்டை மற்றும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேரே தற்கொலைக் குண்டுதாரிகள் எனத் தெரிவிக்பட்டுள்ளது.

சாய்ந்தமருது - வெலிவேரியன் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பொது மைதானம் ஒன்றில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அம்பாறை - சாய்ந்தமருது, நிந்தவூர் பகுதிகளில் புலனாய்வுத் தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களால் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினரை நோக்கி துப்பாக்கி தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இராணுவத்தினர் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது குறுக்கிட்ட பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 அல்லது நான்கு பேர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிந்தவூரில் பாதுகாப்பு படையினரால் பதிவு செய்யப்படாத புதிய சிற்றூர்ந்து ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிற்றூர்ந்து, தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரான சஹ்ரானின் மைத்துனரான நியாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அங்கு மீட்கப்பட்ட 2 அடையாள அட்டைகளை அடிப்படையாக கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்த சிற்றூர்ந்து கடந்த 19ம் திகதி அக்கரைப்பற்றில் இருந்து பணத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பாந்துறையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாரிய அளவான வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

No comments