மிஷல் பேஷிலேட் மறுப்பால் மூக்குடைபட்ட ஆளுநர்!

கடந்த மார்ச் 20 ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைப் பேரவையில் பங்கேற்க வந்திருந்த இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் தான் அன்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலக அறிக்கை தொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடலை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் செவ்வாயக் கிழமையன்று பத்திரிகை ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில் தவறான விதத்தில் எடுத்துரைத்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை உயர் ஸ்தானிகர் மிஷல் பேஷிலேட் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில நாளேட்டில் திங்கற்கிழமை வெளியான ஒரு செய்தியில் , இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவின் ஒரு அங்கத்தவராக ஜெனீவாவில் பங்கேற்ற வட மாகாண ஆளுனரான கலாநிதி சுரேன் ராகவன் கருத்துத் தெரிவிக்கையில் ‘இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் உள்ள சில விடயங்களை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது’ என ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதன் பிறகு ‘அதிக பொறுப்புணரச்சி மற்றும் எச்சரிக்கையுடன்’ செயல்படுமாறு ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அவருடைய இரு முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும் ஆளுனர் ராகவன் கூறியதாக டெய்லி மிரர் பத்திரிகையின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் வட மாகாண ஆளுனரின் மேற்படி கூற்றுக்களை முற்றாக மறுக்கும் ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் பேஷிலேட் , ‘இந்த இரு கருத்துக்களில் எதுவும் உண்மையானதல்ல’ என வலியுறுத்தியுள்ளார். ‘ஒன்றில், ஆளுனர் கூறியதை (டெய்லி மிரர்) பத்திரிகை தவறாக புரிந்திருக்க வேண்டும். அல்லது நான் கூறியதை ஆளுனர் தவறாக விளங்கியிருக்க வேண்டும் -அல்லது தவறாக என்னை மேற்கோள் காட்டியிருக்க – வேண்டும்’ என உயர் ஸ்தானிகர் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உயர் ஸ்தானிகர் திருமதி பேஷிலேட், மனித உரிமை பேரவைக்கு தான் சமர்பித்த எழுத்து மற்றும் வாய்மூல கூற்றுக்கள் விடயத்தில் தான் ஸ்திரமாக இருப்பதாகவும், அக்கூற்றுக்கள் இலங்கையின் தற்போதைய நிலைமையை மிகச் சரியாக பிரதிபலிப்பதாக தான் நம்புவதமாகவும் கூறினார்.

‘இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவினருடன் மேற்கொண்ட சம்பாஷனையில் நான் கூறிய கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளமை என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது’ எனக் கூறிய உயர் ஸ்தானிகர், ஜெனீவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைப் பேரவையில்
கூறப்படும் விடயங்களை பாரிய விதத்தில் தவாறாக எடுத்துரை செய்யும் போக்கை இலங்கை பத்திரிகைகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

சாதாரண வழமையின் பிரகாரம் ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின் பிரதிகளை, அது பிரசுரிக்கப்படுவதற்கு முன் பேரவையின் 47 அங்கத்தவ நாடுகளினதும் வேண்டுகோளினடிப்படையில் இலங்கை அரசிற்கும் பகிரப்பட்டுள்ளது. அறிக்கையை இறுதி மாற்றங்களுடன் பிரசுரிக்கப்படுவதற்கு முன் இலங்கை அரசின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரிதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர்கள், இலங்கை அரசின் பல உயர் அதிகாரிகளை சந்தித்து அறிக்கையின் விடயங்கள் தொடர்பாக மிக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர் பேஷிலேட், ஐநா மனித உரிமை பேரவையின் 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மாணங்களை செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க தானும் தனது அதிகாரிகளும் முற்றாக அர்பபணிப்புடன் இருப்பதாக உறுதியளித்தார். அத்துடன் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தீர்மாணத்தின் (40/1) போது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு வாக்களித்த சில விடயங்களை பூர்த்தியாக செயற்படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டதையும் திருமதி பேஷிலேட் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2009 ஆண்டு முடிவிற்கு வந்த மோதல்களின் போது நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் வழங்குதல் தொடர்பான தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்ட முன்னெடுப்புக்களில் இலங்கை அரசு மீள்கவனம் செலுத்த வேண்டும் என்றும், என்ன நடந்தது என்ற விடயம் தொடர்பான உண்மைகளை நிலைநிறுத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் தேவையான தமது பொறுப்புக்களை நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் ஸதானிகர் பேஷிலேட் வலியுறுத்தினார்.

No comments