போராளிகளின் கோப்புக்களை மகிந்த காட்டினார்

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்டன. அவற்றைத் தங்களுக்குக் காண்பித்தார் என்றார். 

2011 மற்றும் 2012 ஆண்டுகளில், மஹிந்த, பஷில் ராஜபக்‌ஷர்களுடன் பலமுறை சந்திப்புகள் இடம்பெற்றன. இதன்போது, சிறையில் அடைக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளின் விவரங்கள் அடங்கிய, ஏழு ஆவணங்களைக் காண்பித்தனர் எனத் தெரிவித்த அவர், வவுனியா முகாமுக்குச் சென்று, அவர்களைப் பார்வையிடலாம் என்றனர். எமது பிரதிநிதிகள் அங்கு சென்றபோது, முகாமுக்குள் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்றார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (26) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

“இறுதி யுத்தத்தின்போது போராளிகள், அவர்களின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்டன” என்றார். 

அவரின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் பலமுறை அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் முன்னாள் போராளிகளதும் அரசியல் கைதிகளதும் விவரங்கள் குறித்து ஏழுக்கும் மேற்பட்ட கோப்புகளை எங்களிடம் காட்டினார். அந்தப் பட்டியல் தற்போதும் அரசாங்கத்திடம் காணப்படுகின்றதாக நாம் நம்புகின்றோம். எனவே, 

காணாமலாக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.   

No comments