வடமாகாண பௌத்த மாநாடு:செத்தவர்களிற்கு பிரார்த்தனையாம்?


ஆளுநர் சுரேன் இராகவன் நாளை வவுனியாவில் நடாத்தும் பௌத்த மாநாட்டினால் இலங்கையர்கள் மற்றும் உலக மக்களுக்கு நற்செய்தி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பௌத்த மாநாடு நாளை மார்ச் 29ஆம் திகதி வவுனியா சிறீ போதி தட்சிணாராம விகாரையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு இரு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வெவ விமலசார தேரர் அவர்கள் , புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் வடமாகாண பௌத்த மாநாடு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிநடத்தலில் நடைபெறவுள்ளதோடு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் கீழ் புத்தசாசன அமைச்சு, பிரதேச அரசியல் தலைவர்கள் , முப்படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.

வவுனியா சிறீபோதி தட்சிணாராம விகாரையில் நாளை முற்பகல் 8.15க்கு சமய வழிபாடுகளின் பின்னர் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுடனான மத அனுஸ்டானங்களோடு பௌத்த தேரர்கள் மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டு சமயவழிபாடுகளின் பின்பு சர்வ மத தலைவர்களின் ஆசிவழங்கப்பட்டு இவ் வடமாகாண பௌத்த மாநாடு ஆரம்பிக்கப்படவுள்ளது. யுத்தத்தால் உயிர் நீத்த மக்களுக்கான ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இதன்போது நடைபெறவுள்ளது.

பிற்பகல் , வடமாகாண மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் , கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் கலந்துரையாடப்படவுள்ளதுடன் வடமாகாணத்தில் நடைபெறும் இந்த பௌத்த மாநாட்டினால் இலங்கையர்கள் மற்றும் உலக மக்களுக்கு நற்செய்தி வழங்க எதிர்பார்க்கப்படுகின்றதென ஆளுநர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

No comments