யாழில் சுதேசிய நூற்றாண்டுவிழா!


தமிழ் மக்களுடைய கலை கலாச்சாரத்தை அழியவிடாது பாதுகாக்கும் நோக்கிலும் சமூகத்தை நல்ல பாதையில் வழிநடத்துவதற்கு உந்துசக்தியாகவும் விளங்கும் சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டுவிழா யாழ் அரியாலை கிராமத்தில் நடைபெறவுள்ளதால் அனைவரையும் பங்கெடுக்குமாறு முன்னாள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் விழாத் தலைவருமான செ.பத்மநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற எதிர்வரும் மாதம் இரு வாரங்கள் நடைபெறவுள்ள சுதேசிய நூற்றாண்டுவிழா சம்பந்தமான  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் கலைகள் அழியக் கூடாது என்ற நோக்கில் இந்த விழாவை நடத்தி வருகின்றோம.; யாழ்ப்பாணம் கிழக்கில் அமைந்துள்ள இந்த அரியாலைக் கிராமம் கலைகளுக்கும்  விளையாட்டுக்களுக்கும் பெயர்போன கிராமமாகும். 1919 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா 2019 இல் நூறாவது ஆண்டாக நடைபெறவுள்ளது.

பகலில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இரவில் நாடக கலை நிகழ்வுகளும் நடைபெற்று வந்தன. இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக 99 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. இந்த ஆண்டை நூற்றாண்டுவிழாவாக பெரும் விழாவாக நடத்தவுள்ளோம்.  

ஆரம்ப காலங்களில் உள்ளுர் மக்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. இப்பொழுது புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் நடைபெறவுள்ளதால் மிகச் சிறப்பாக நடத்தவுள்ளோம். 

மாவட்ட தேசிய சர்வதேச ரீதியாக போட்டிகளை நடத்தியிருக்கிறோம். 
தமிழ் மக்களுடைய கலை கலாச்சாரத்தை அழியவிடாது பாதுகாப்பதற்காக இந்த விழாவை நடத்தி வருகின்றோம். முன்னோர்கள் வழிநடத்திய தமிழ் பண்பாட்டை ஒட்டிய நிகழ்வுகளை அழியவிடாது தொடர்ந்தும் அரியாலை மண் பாதுகாத்து வருகிறது என்பதற்கு இந்த நூற்றாண்டு விழா சான்றாகும். 

சமூகத்தை நல்ல பாதையி;ல் வழிநடத்துவதற்கு உந்து சக்தியாக இந்த பாரம்பரிய நிகழ்வுகள் அமைகின்றன. எனவே இந்த நிகழ்வில் அனைத்து மக்களும் கலந்த கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். 

No comments