முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சதி தொடங்கியது



முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் வகையில் சிலர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யுத்தத்தில் உறவுகளை பறிகொடுத்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பறிகொடுத்த உறவுகளை நினைவு கூர்ந்து மனமார்த அஞ்சலிகளை செய்யும் ஆத்மார்த்த நினைவேந்தலை சுயநலனுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அம்மக்கள் உருக்கமான கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்காக தமிழர் மரவுரிமை பேரவை, முள்ளிவாய்க்கால் கிராம அபிவிருத்தி சங்கம், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றினைணந்து குழு ஒன்றினை அமைப்பதற்கான கூட்டம் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த பொது குழுவே இனிவரும் காலங்களில் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாத வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தும் என்றும் அக் கூட்டத்தில ்ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று புதன்கிழமை முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற புணர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராஜ் உள்ளிட்டவர்கள் அங்குள்ள மக்களை அழைத்து தாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இவ்வருடம் செய்யப் போவதாகவும், அதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்நினைவேந்தலை நடாத்துவதற்கு குழு ஒன்றினை தான் நியமிக்கப் போவதாகவும், அதில் முள்ளிவாய்க்கால்  பகுதி மக்களையும் உள்வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் மற்றும் வேவ்வேறு பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மாணவர் சமூகம் போன்றவை ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொது குழுவினை அமைத்துள்ள நிலையில், கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எந்த நினைவேந்தலையும் செய்யப் போவதில்லை என்று பகிரங்கமாக ஊடகங்கள் முன் தெரிவித்த குறித்த இன்பராஜ் என்பவர் திடீரென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை செய்ய முன்வந்துள்ளமை பல்வேறு கேள்விகளை ஏழுப்புகின்றது.

முள்ளிவாய்க்காலில் தொலைந்து போனா உறவுகளை நினைவு கூறும் நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  இவர்களுடைய செயற்பாடு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 பறிகொடுத்த உறவுகளை நினைவு கூர்ந்து மனமார்த அஞ்சலிகளை செய்யும் அந் நிகழ்வினை சுயநலத்திற்கான யாரும் குழப்ப முற்பட வேண்டாதம் என்றும் அப்பகுதி மக்கள் உருக்கமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

No comments