குருநகரிலிருந்து கடலுக்குச் சென்ற இரு மீனவர்களைக் காணவில்லை

குருநகரில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். குருநகர் இறங்குதுறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (18) விசைப்படகு மூலம் இரண்டு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
பாசையூரைச் சேர்ந்த 55 வயதான லியோரி பாஸ்கரன் மற்றும் 27 வயதான எல்டின் ராஜ் பிரபு ஆகியோரே மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயுள்ளனர்.
நெடுந்தீவிற்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் தொலைபேசி மூலம் குருநகர் மீனவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், காணாமற்போன மீனவர்கள் கூறிய இடத்திற்கு குருநகர் மீனவர்கள் சென்று பார்த்த போது, அவர்கள் அங்கிருக்கவில்லை.
காணாமற்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளை குருநகர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments