“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” - யாழில் புதிய கட்சி அங்குரார்ப்பணம்


ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார,சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் நேற்று (27) யாழில் புதிய கட்சியொன்று உதயமாகியுள்ளது.

“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் பெயரில் மேற்படி கட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) முற்பகல் யாழ்.நகரிலுள்ள றிம்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, கிருஸ்ணராசா கோவிந்தராசன், கார்த்திகேசு கதிர்காமநாதன், மாணிக்கம் லோகசிங்கம், கதிரவேலு மதன கோணகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரை இணைத்தலைமையாகக் கொண்ட கூட்டுத் தலைமையில் குறித்த கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இணைத்தலைவர்களில் ஒருவரான மாணிக்கம் லோகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் இணைத் தலைவர்கள் சிறப்புரைகளாற்றினர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணியின் பொருளாளர் து.சுஜிந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் பி. கல்கி, மூத்த சட்டத்தரணி சோ.தேவராஜா, சட்டத்தரணி பழனி குகனேஸ்வரன், ஓய்வுநிலை வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திரி ஐ. தர்மகுலசிங்கம், ஓய்வுநிலை கணக்காளர் க. இராஜேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கருத்துரைகளாற்றினர்.

நலிவடைந்த அல்லது அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள சமூகத்தின் கல்வி,பொருளாதார, கலாசார, சுகாதார, வாழ்வாதார மேம்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக அரசியல் அதிகாரம்,அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் பொருட்டு “மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் இணைத்தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள “மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” காலப் போக்கில் தேசிய ரீதியாக செயற்படுவதற்கான அபிலாசைகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்மக்களின் தலைமைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிஞ்சித்தும் அக்கறை காட்டுவதில்லை என கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவரும் குறிப்பிட்டனர். எனவே, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல் நீரோட்டத்தில் இணைவதே ஒரே வழி எனவும் அவர்கள் கூறினர்.

இன்றைய தினம் “மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் புதிய கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளமை தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனை எனவும் பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

No comments