யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட பாஸ் நடைமுறை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான பாஸ் வழங்கல் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாஸ் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னர், பாஸ் நடைமுறைப்படுத்துவது தொடர்பில், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களும் பெறப்பட்டன.
தாதியர்கள் மற்றும் நோயாளர்களின் கருத்துக்களுக்கு இணங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட பாஸ் நடைமுறைப்படுத்தவுள்ளது” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1250 ற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. நோயாளர்கள் விடுதிகளில் சிகிச்சை பெறுகின்ற போதும், 3 வேளைகளிலும் பார்வையாளர்களை அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஒரு நோயாளர்களைப் பார்வையிட அதிகமானவர்கள் வருவதனால், நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றதுடன், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அவசர நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ஒரு நோயாளரைப் பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வந்து அந்த நோயாளரை சுற்றி நிற்கும் போது, அருகில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

 இந்த விடயங்களை வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில் ஒரு நோயாளியைப் பார்க்க நோயாளிக்கு அருகில் இருவர் மாத்திரமே செல்ல முடியும். பலர் வைத்தியசாலைக்கு வருகை தந்தாலும், அவர்கள் வைத்தியசாலையின் தரித்துச் செல்லும் பகுதியில் இருந்து, நோயாளியைப் பார்க்கச் சென்றவர் வந்ததன் பின்னர், இருவராக சென்று பார்வையிட முடியும்.
வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கப்படும் பாஸை பார்வையாளர்கள் கொண்டு சென்று இருவராக பார்வையிடுமாறும், அவ்வாறு பார்வையிடுவதனால், நோயாளர்களுக்கு ஏற்படும் கிருமித் தொற்றுக்கள் மற்றும் காற்றோட்டத்தை வழங்க முடியுமென்பதுடன், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் நோயாளிக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கும் உதவியாக இருக்கும் .

எனவே, பாஸ் நடைமுறையைப் பின்பற்றி நோயாளிக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

No comments