புதிய அரசியலமைப்பு வரைபு நாளை சமர்ப்பிப்பு

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாளை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது சபையில் சமர்ப்பிப்பார்.

அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், அரசியலமைப்புச் சபையின் கூட்டம் இடம்பெறும்.

நாளை பிற்பகல் 12.30 மணிவரை அரசியலமைப்பு சபையின் கூட்டம் இடம்பெறும்.

இதன்போது, நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக, கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

பேராசிரியர் சூரி ரத்னபால தலைமையிலான 10 பேர் கொண்ட நிபுணர் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் நவரத்ன பண்டார, கலாநிதி என்.செல்வக்குமரன், பேராசிரியர் கமீன குணரத்ன, பேராசிரியர் கபில பெரேரா, சுரேன் பெர்னான்டோ, நிரன் அங்கெரெல், அசோக குணவர்த்தன, சமிந்ரி சமரமடு ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

No comments