யாழில் வழிப்பறிக் கொள்ளையர் இருவர் கைது - தங்க நகைகள் மீட்பு


யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்கப்பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறிகளும் நகைத் திருட்டுக்களும் இடம்பெற்று வந்தன. இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இதற்கமைய இந்த நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒருவரையும் இந் நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற ஒருவரையுமாக இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிலையும் மீட்டுள்ளனர்.

இதன் போது சுமார் பத்து இலட்சம் ருபா பெறுமதியான பதினைந்து பவுண் தங்க நகைகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த நகைத் திருட்டுக்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.இமானுவேல் தலைமையிலான பதில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி திசாநாயக்க, தினேஸ் கருனாநாயக்க, சமுத்திரவ, சூரியகுமார், ஆர்.ரஞ்சித், சேனாரத்ன, சி.குமார, கேரத், பிரபாத், தினேஸ்கரன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கமைய நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய இருவரும் அவர்களிடமிருந்த நகைகளையும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் வாகனத்தையும் மீட்டுள்ளனர். இந் நகைக் கொள்ளைகள் உள்ளிட்ட நகைக் கொள்ளைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் மேற்படி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதால் அவருக்கு போதைப் பொருளை பெற்றுக் கொள்வதற்கு பணம் தேவைபடுவதாலேயே இவ்வாறு நகைக் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments